டாடா நிறுவன ஆலை செயல்படாதது ஏன்?: - நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி: டாடா ஆலை தொடர்பாக கலெக்டர் அறிக்கையில் கூறியிருந்தது என்ன என்பது குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார். நெல்லையில் நடந்த அ.தி.மு.க.,பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் தொழில்வளம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டாடா ஆலையை கொண்டுவர அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்காக இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. டாடாவுக்கு 16 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும் என்றனர்.

ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன் இல்மனைட் தாதுவை வெட்டி எடுப்போம் என்றனர். அதிலும் 50 ஆயிரம் டன் இல்மனைட்டைத் தான் டைட்டானியம் டை ஆக்சைட் தயாரிக்க பயன்படுத்த போவதாகவும் மீதமுள்ள இல்மனைட்டை அப்படியே வெளிநாட்டிற்கு அனுப்ப போவதாகவும் கலெக்டர் அறிக்கையில் தெரிவித்தார். டாடா மூலம் கனிமவளங்கள் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் என அறிக்கை மூலம் தெரியவந்தது. எனவே அந்த திட்டம் விவாத நிலையிலேயே நின்றுபோனது. டாடா எதிர்பார்க்கும் 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வைகுண்டராஜன் ஏற்கனவே சில ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். எனவே இதுதொடர்பாக நடந்த விவாத கூட்டங்களில் வைகுண்டராஜன் பங்கேற்றார். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான் முழுமையாக நிலங்களை கையகப்படுத்தி தந்தோம். அதை இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தாதது ஏன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


(தினமலர், 06-08-2007)

0 மறுமொழிகள்: