சாய் சப் செண்டர் நெல்லைக்கு மாற்றம்! குமரி விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு பேரணி

நாகர்கோவில்: ராஜாக்கமங்கலத்திலிருந்து நெல்லைக்கு சாய் சப் சென்டரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கிராம மக்கள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் போது இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் (சாய் சப் சென்டர்)அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.அதற்காக மாநில அரசின் சார்பில் சாய் சப் சென்டருக்கு 53 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து சாய் சப் சென்டருக்கு ராஜாக்கமங்கலத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது.அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.தற்போது சாய் சப் சென்டர் நெல்லைக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாய் சப் சென்டர் நெல்லைக்கு கொண்டு செல்ல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.வரும் 10 ம் தேதி(செப் 10)முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.நேற்று கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கிராம மக்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் ராஜரெத்தினம் தலைமை வகித்தார்.மாவட்ட கபடி கிளப் அவைத்தலைவர் எஸ்.சதாசிவன், ராஜாக்கமங்கலம் பஞ்.,தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட கபடி கிளப் தலைவர் பூபதி, யூனியன் கவுன்சிலர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.டி.பச்சைமால், குமாரதாஸ், மாவட்ட வாலிபால் கழக இணை செயலாளர் ஆர்.கிருஷ்ணதாஸ், செயலாளர் செல்லசிவலிங்கம், கபடி கிளப் துணைத் தலைவர் கணேசன், சாய் சப் சென்டர் நடவடிக்கை குழு பொதுச் செயலாளர் எம்.சுயம்பு, துணைத் தலைவர் நடராஜன் உட்பட பலர் பேசினர். முன்னாள் பஞ்.,தலைவர்கள் முருகன், தங்கராஜ், பூமதி, கவுன்சிலர் கலைச்செல்வி, தர்மலிங்க உடையார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட கபடி கிளப் செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.

(தினமலர். 17-08-2007)

0 மறுமொழிகள்: