கங்கண சூரிய கிரகணம்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 21-09-2006

இம்மாதம் 22-ந் தேதி சூரியனின் நடுப் பகுதி மறைக்கப்பட்டு சூரியன் நெருப்பு வளையம் போல காட்சியளிக்கப் போகிறது. இது ஒரு வகை சூரிய கிரகணமே. இது கங்கண சூரிய கிரகணம் எனப்படுகிறது. (கங்கணம் என்றால் வளை).

சூரிய கிரகணம் ஏற்படுவது ஒரு பெரிய அதிசயமல்ல. இது அடிக்கடி நிகழ்வது தான். பூமியை ஓயாது சுற்றிக் கொண்டிருக்கிற சந்திரன் அவ்வப்போது சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்காக வந்து நிற்கும். அதாவது நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் முகத்தருகே ஒருவர் கையை விரித்து நீட்டினால் டிவி திரை மறைக்கப்படுகிறது. இவ்விதமாக சந்திரன் வந்து சூரியனின் ஒளித் தட்டை மறைக்கிறது.

எப்போதுமே அமாவாசையன்று தான் சூரிய கிரகணம் நிகழும். ஏனெனில் அமாவாசைகளில் தான் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் அமைவதாகிறது. ஆனால் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை. காரணம் சந்திரனின் சுற்றுப்பாதை சற்று கீழாக அமைகிறது. அல்லது சற்று மேலாக அமைகிறது. ஆகவே தான் சந்திரன் ஒவ்வொரு அமாவாசையிலும் குறுக்கே வந்து நிற்பதில்லை.

சந்திரன் சில சமயங்களில் அவ்விதம் நேர் குறுக்கே வந்து நிற்கிது. அப்போது சூரியனின் ஒளித் தட்டு முழுவதுமாக மறைக்கப்படும். அது முழு சூரிய கிரகணம் ஆகும். அப்படியான நிலைமைகளில் சந்திர வட்டமும் சூரியனின் ஒளித்தட்டும் மிகச் கச்சிதமாக பொருந்துவதாக இருக்கும். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். வானில் நம் பார்வைக்கு சூரியனும் பெüர்ணமி சந்திரனும் அநேகமாக ஒரே அளவில் இருக்கின்றன. அதற்குக் காரணம் உண்டு. குறுக்களவை வைத்து ஒப்பிட்டால் சந்திரனை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சந்திரன் உள்ள தூரத்துடன் ஒப்பிட்டால் சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளது. இது தற்செயல் பொருத்தமே. ஆகவேதான் சூரியனும் சந்திரனும் பார்வைக்கு ஒரே அளவில் இருப்பதாகத் தெரிகிறது.

எனினும் பூமியிலிருந்து சந்திரன் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஒரு சமயம் சந்திரன் அதிகபட்சமாக 4,05,542 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கலாம். வேறு சமயங்களில் அது குறைந்த பட்சமாக 3,63,296 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கலாம். சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கின்ற சமயத்தில் அது சூரியனை மறைக்கின்ற வகையில் நேர் குறுக்கே நிற்குமானால் அப்போது அது சூரியனின் ஒளித் தட்டை விளிம்புடன் விளிம்பு பொருந்துகிற வகையில் முழுமையாக மறைக்காது. சூரிய ஒளித் தட்டின் நட்ட நடுவில் சந்திரன் அமைந்துள்ளது போலக் காட்சி அளிக்கும். அந்த நிலைமையில் தான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

சில சமயங்களில் சூரியனின் ஒளித் தட்டை சந்திரன் ஓரமாகக் கடக்கும். அவ்வித நிலையில் அரைகுறை சூரிய கிரகணம் நிகழும்.

இப்போது நிகழ்கிற கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 2010-ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி இதே போல கங்கண சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. அது தமிழகத்தில் தெரிவதாக இருக்கும். பொதுவில் சூரிய கிரகணத்தின் போது சூரியனை வெறுங்கண்ணால் பார்க்கவே கூடாது.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பற்றிப் பல மூட நம்பிக்கைகள் உண்டு. இந்த விஞ்ஞான யுகத்திலும் அவை முற்றிலுமாக நீங்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. கிரகண நேரத்தில் வெளியே வந்தால் ஏதோ விபரீதம் ஏற்பட்டு விடும் என்ற பீதியில் மக்கள் வீடுகளில் முடங்கினர். சென்னை நகரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மூட நம்பிக்கையே அதற்குக் காரணம்.

0 மறுமொழிகள்: