"வானொலி அறிவிப்பாளரா? மிமிக்ரி ஆர்டிஸ்டா?''

"வானொலி அறிவிப்பாளரா? மிமிக்ரி ஆர்டிஸ்டா?'' - ந.ஜீவா


"ஹலோ யார் பேசறது?''

"மடிப்பாக்கத்திலிருந்து மன்னார்சாமி''

"ஹாய் மன்னார்சாமி...என்ன பண்றீங்க''

"தலையச் சொறிஞ்சிக்கிட்டிருக்கேன்...''

"ஹய்...யோ...எப்பிடிங்க மன்னார்சாமி இவ்வளவு ஸ்பான்டனியஸô கடிக்கிறீங்க?''

ரேடியோவைத் திறந்தால் இப்படி விதவிதமான குரல்கள். அதுவும் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசும் வானொலி அறிவிப்பாளர்கள்...தப்பு...தப்பு... ரேடியோ ஜாக்கிகள்.

தனியார் எஃப்.எம். ரேடியோ வந்த பின்னால் இப்படி இரவு, பகல் எந்நேரமும் இசை மழையும் பேச்சு மழையும் பொழிந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுக்கடங்காத இசை வெள்ளம் வளர்ச்சிதானா? இல்லை வீணா? என்று ரொம்பவும் கவலைப்பட்டு இதுபற்றித் தெரிந்த யாரிடமாவது கேட்க வேண்டும் என்று எஸ்.சம்பத்குமாரை அணுகினோம்.

ஒலிபரப்புத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர் எஸ்.சம்பத்குமார். 1969 - 75 கால கட்டத்தில் சென்னை விவித்பாரதியில் அறிவிப்பாளர். அதன் பின் தூர்தர்ஷனில் தயாரிப்பாளர். அப்புறம் லண்டன் பிபிசி தமிழோசையில் பணி. இப்போது சென்னையில் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் "வானொலி இயலைச்' சொல்லித் தரும் விரிவுரையாளர். அவரிடம் பேசியபோது....

அன்றைய வானொலிக்கும் இன்றைய எஃப்.எம். வானொலிக்கும் என்ன வித்தியாசம்?

அப்போது வானொலி என்றால் ஆல் இன்டியா ரேடியோ மட்டும்தான். ஓர் அறிவிப்பாளர் இப்போது எஃப்.எம்.மில் பேசுவது மாதிரி அப்போது பேச முடியாது. "அடுத்துவரும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பணமா? பாசமா? பாடியவர்கள்: டி.எம்.செüந்தரராஜன், பி.சுசீலா' என்ற அறிவிப்பைக் கூட எழுதி வைத்து அதில் மேலதிகாரியிடம் கையெழுத்து வாங்கிய பின் அதை வாசிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்குத் தவறான செய்தி போகக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அப்போது ஆல் இன்டியா ரேடியோவிற்கு என வழிகாட்டும் நெறிமுறைகள் இருந்தன. மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; நட்பு நாடுகளுக்கு எதிரான செய்திகளைச் சொல்லக் கூடாது என்று நிறைய விதிமுறைகள்.

தமிழில் பேச்சு வழக்கு என்றும் எழுத்து வழக்கு என்றும் இருக்கிறது. பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடைவெளி குறைய வேண்டும். ஆனால் எழுதிப் படிக்கும் போது இந்த இடைவெளியை எப்படிக் குறைப்பது? குரலில் ஏற்றத் தாழ்வுகள் கொடுத்துப் பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.

இந்த வகையில் வானொலித் தமிழுக்கு அன்று உயிர் கொடுத்தவர்கள் இலங்கை வானொலியைச் சேர்ந்த மயில்வாகனன், ராஜா, ஹமீது போன்றவர்கள். அவர்களுடைய அறிவிப்பைக் கேட்கவே சுகமாக இருக்கும். இங்கே கூத்தபிரான், ஜெயங்கொண்டான் போன்றவர்களைச் சொல்லலாம். இருந்தாலும் இலங்கை வானொலியை நாம் நெருங்க முடியாது. அதுபோல லண்டன் பிபிசி தமிழோசையில் செய்தியை சங்கரமூர்த்தி மிகவும் சுவையாகக் கொடுப்பார். ஆனந்தியின் குரலை இன்று முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாரும் நல்ல தமிழை எந்த இலக்கண வழுவும் இல்லாமல் பேசியவர்கள். பிபிசியில் நல்ல தமிழில் செய்தியைக் கொடுங்கள் என்று சொல்வார்கள்.

அதற்காக மக்களுக்குப் புரியாத தமிழில் கொடுங்கள் என்று அர்த்தமல்ல. அன்றாடம் வழக்கத்தில் உள்ள தமிழைக் கொடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் இன்று எஃப்.எம். வானொலியில் உள்ள தமிழைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுகிறார்கள். பேச்சுத் தமிழில், கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள். யார் வானொலி கேட்கிறார்கள்? அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பதைத் திட்டமிடாமல் பேசுகிறார்கள். ""என்ன மச்சி, உன் ரவுசு தாங்க முடியலை'' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று நல்ல ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

இதில் இவர்கள் யாரிடம் பேசுகிறார்கள்? சென்னையில் வாழும் சாதாரண மனிதனிடமா? இல்லை நன்கு ஆங்கிலம் கற்ற நடுத்தர வர்க்க மனிதனிடமா? இவர்களுக்கு, யாருக்கு நிகழ்ச்சி பண்ணுகிறோம்? அவர்களுக்கு என்ன மாதிரியான பேச்சு தேவை? போன்றவற்றைப் பற்றி அடிப்படையான திட்டம் எதுவும் இல்லை.

இப்போது வானொலியில் ரேடியோ ஜாக்கிகள் நேயர்களிடம் நன்கு பேசுகிறார்கள். வானொலி என்பது ஒரு வழி தகவல் சாதனம் என்ற நிலை மாறி நேயர்களும் பங்கேற்பது நல்லதுதானே?

என்ன நல்ல மாற்றம்? டெலிபோனில் வழிவது நல்ல மாற்றமா? இது முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. ஏதாவது உருப்படியான விஷயங்களைப் பேசினால் கேட்கும் அனைவருக்கும் பயன் இருக்கும். இவர்கள் பேசுவது எல்லாம் , ""என்ன பண்றீங்க?'' ""சாப்ட்டாச்சா? காலையில பத்துமணி வரைக்கும் தூங்குவீங்களா?'' என்கிற மாதிரியான பேச்சு. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

இப்படிப்பட்ட மாறுதலுக்கு என்ன காரணம்?

உலகம் வர்த்தக உலகம் ஆகிவிட்டது. எஃப்.எம். தனியார் வசம் வந்துவிட்டது. அவர்களுக்கிடையே கடுமையான போட்டி. ஒருவர் இன்னொருவரை விஞ்ச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பது சினிமாப் பாட்டு போடுவது ஒன்றுதான். செய்தி கிடையாது. அதனால் எப்படியாவது நேயர்களை வளைத்துப் போட வேண்டும் என்பதற்காகப் பலவிதங்களிலும் இறங்குகிறார்கள்.

சில அறிவிப்பாளர்கள் பிரபல நடிகர்கள் மாதிரி - ரஜினிகாந்த் மாதிரியெல்லாம் குரலை மாற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் அறிவிப்பாளர்களா? இல்லை மிமிக்ரி ஆர்டிஸ்ட்களா என்று தெரியவில்லை.

இந்த நிலைக்குக் காரணம் இன்றைய உலகமயச் சூழலும் காரணம் என்று சொல்ல வேண்டும். நுகர்வோர் பொருட்கள் நமது சந்தைக்கு வந்து குவிகின்றன. இந்தப் பொருள்களை மக்கள் வாங்க வேண்டும். அதற்கு நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும். வானொலி என்பது மக்களுக்கு அறிவூட்டும், தகவல் அளிக்கும், சந்தோஷத்தைத் தரும் சாதனம் என்பது போய் விளம்பரங்களுக்கான சாதனமாகிவிட்டது.


அரசு வானொலியான விவித் பாரதியில் கூட முதலில் எல்லாம் நிறைய விளம்பரங்கள் வந்தனவே?

அதற்குக் காரணம் அப்போது வர்த்தக விளம்பரங்கள் வரும் ஒரே வானொலியாக அது இருந்தது. எல்லா வானொலி விளம்பரங்களும் அதில்தான் வர வேண்டும். அந்த விளம்பரத்தைக் கூட எவ்வளவு சுவையாகக் கொடுத்தார்கள் என்பது இப்போதும் ஞாபகத்துக்கு வருகிறது. சில விளம்பரங்கள் பாடல்கள் போலவே மக்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும். ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது.

இப்போது ரேடியோ ஜாக்கிகளாகப் பணிபுரிபவர்கள் இளைஞர்கள். இளைஞர்களுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் பேசுகிறார்கள். அதைத் தவறு என்று சொல்ல முடியாதே?

இவர்கள் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழில் பேசுவதற்கும் இளைஞர்களாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? இப்போது எல்.கே.ஜி.முதல் கல்லூரி படிப்பு வரை ஆங்கில மீடியம் என்றாகிவிட்டது.

இப்போதுள்ள இளைஞர்களில் பலருக்கு இதனால் ஆங்கிலமும் சரியாகத் தெரியாது; தமிழும் சரியாகத் தெரியாது. அப்படியிருக்கும் போது இவர்கள் எப்படி நல்ல தமிழை அழுத்தம் திருத்தமாகப் பேசுவார்கள்? நான் நல்ல தமிழ் என்று சொல்வது மக்களுக்குப் புரியாத தூய தமிழை அல்ல. சில ஆங்கிலச் சொற்கள் தமிழ் போலவே வழங்கி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ஒரு முக்கியமான எஃப்.எம். வானொலி அறிவிப்பாளருக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தமிழ் தெரியாது. தெலுங்கு அவரின் தாய்மொழி. அவர் எப்படி தமிழில் பேசுகிறார் என்கிறீர்கள்? தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துச் சமாளிக்கிறார்.

இதெல்லாம் தேவைதானா? உச்சரிப்புச் சுத்தம் எப்படி வரும்?

நீங்கள் பேசுவது மாற்றத்தை ஏற்காத மனோபாவத்தைக் காட்டுவதாகத் தெரிகிறதே?

மாற்றம் நல்ல மாற்றமாக இருந்தால் வரவேற்கலாம். நான் பேசுவதைப் பார்த்து என்னைப் பழமைவாதி என்று கூடச் சிலர் சொல்லலாம். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

ஆனால் இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயமும் ஒன்று உள்ளது. இந்த ரேடியோ ஜாக்கிகள் பேசுவதை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை. எப்போது பாட்டு போடுவார்கள்? என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். பாட்டு கேட்கத் தானே ரேடியோ போடுகிறார்கள்?

தினமணி கதிர், 27-08-2007

1 மறுமொழிகள்:

said...

நல்லப்பதிவு,

தற்போதைய பண்பலை ஒலிபரப்பில் பாடல் வரும் நேரம் விட பேசும் நேரம் தான் அதிகம். பல நேரங்களில் எரிச்சல் படுத்தும். வெகு அரிதாக நகைக்கவும் வைக்கும்.பெரும்பாலனவர்களுக்கு இப்படி போன் செய்து பேசும் அளவிற்கு நேரமும் , போன் பில் கட்ட வசதியும் இருப்பது தான் ஆச்சரியம்! இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என எடுத்துக்கொள்ள வேண்டும் போல!