துவங்கியது அத்தம் இனி பூக்களின் காலம்...

மார்த்தாண்டம்: ஓணப்பண்டிகைக்கு முன்னோடியாக அத்தப்பூ கோலமிடுதல் இன்று (17ம் தேதி) முதல் துவங்குகிறது. இனி வரும் நாட்கள் குமரி, கேரள பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் அழகிய அத்தப்பூ கோலங்கள் இடும் பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். ஆடி மாதம் என்பது மழைக்காலம். ஆடி மழையில் குளிர்ந்து தளிர்க்கும் செடிகள் ஆவணி மாதம் பூக்கத் துவங்கும். இந்த காலத்தை பூக்களின் காலம் என்றே சொல்லலாம். அதனால் இந்த காலத்தில் வரும் ஓணத்திருவிழாவை பூக்களின் திருவிழா என்று குறிப்பிடுவது மிகையாகாது. ஓணத் திருவிழாவின் முக்கிய அம்சமே அத்தத்தில் துவங்கி பத்து நாட்கள் பூக்களால் அலங்கரித்து போடப்படும் அத்தப்பூ கோலம் தான். அத்தம் முதல் ஒன்பது நாட்களுக்கு மகாபலியை நினைவுகூறவும் பத்தாவது நாள் மகாவிஷ்ணுவை நினைவு கூறவும் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது என்பது நம்பிக்கை.அதிகாலையில் எழுந்திருக்கும் பெண்கள் குளித்துவிட்டு வீட்டு முற்றத்தை கூட்டி சுத்தம் செய்து தினமும் விதவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடுவர். பூ பறிக்க செல்ல சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதிகாலை எழுந்து குளித்து நெற்றியில் திலகமிட்டு சுத்தமான ஆடை அணிந்து பூ பறிக்க செல்லவேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பூத்துக்குலுங்கும் பூக்கள் ஓணப்பண்டிகைக்காக கேரளா சென்று குவியும். ஓணக்காலத்தில் பல இனம் பூக்கள் பூத்தாலும் ஓணப்பூ, தும்பைப் பூ, காசிப்பூ, அரிப்பூ, சங்குபுஷ்பம் போன்ற பூக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல் நாளில் ஒரு களம், இரண்டாவது நாள் இரண்டு களம்...இப்படி பத்தாவது நாளாகிய ஓணம் நாளில் பத்து களங்கள் இடப்படும்.மற்ற நாட்கள் எப்படி போட்டாலும் பத்தாவது நாளாகிய ஓணம் அன்று பத்து களங்கள் போடவேண்டும். முதல் களத்தில் விநாயகர், இரண்டாவதில் சக்தி, மூன்றாவதில் சிவன், நான்காவதில் பிரம்மா, ஐந்தாவதில் பஞ்ச பூதங்கள், ஆறாவதில் முருகன், ஏழாவதில் குரு, எட்டாவதில் அஷ்டதிக் பாலகர், ஒன்பதாவதில் இந்திரன், பத்தாவதில் விஷ்ணு இப்படி பத்து களங்களிலும் இறை வடிவங்கள் பிரதிஷ்டிக்கப்படுகின்றன.

பிற பகுதிகளில்: கேரளாவில் பூக்களின் திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுவது போல வேறு பல நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பூக்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஓணத்தை போன்ற ஒரு திருவிழா தாய்லாந்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் ஐந்து நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணத்திற்கு செய்வதை போல புத்தாடைகள் அணிந்து வீட்டை பூக்களால் அலங்கரித்து பல்வகை உணவுகளை சமைத்து உண்டு மகிழ்வர். கேரளாவின் புலி விளையாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு ஆட்டமும் உண்டு.

வங்காளத்தின் வைசாகி திருவிழாவும் ஒரு பூத்திருவிழா தான். இந்த திருவிழா காலத்தில் குழந்தைகள் பல இடங்களுக்கும் சென்று பூக்கள் சேகரிப்பர். புத்தாண்டு இனியும் வரட்டும் என்று பாடல்கள் பாடி அந்த பூக்களால் மாலைகள் கோர்த்து கழுத்தில் அணிந்து மகிழ்வர். வங்காள கிராம பெண்கள் பூக்களின் வடிவில் பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.


(தினமலர். 17-08-2007

0 மறுமொழிகள்: