நாட்டில் 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை

புதுடில்லி: நாட்டில் பள்ளிகளுக்கு பற்றாக்குறை இருக்கும் அதே நேரத்தில், 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்காத நிலையும் நீடிக்கிறது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கல்வி திட்டம் மற்றும் நிர்வாகம் குறித்த தேசிய பல்கலைக்கழகம் (நியூபா),"இந்தியாவில் துவக்கக்கல்வி 2005 06' என்ற தலைப்பில், ஆய்வு நடத்தியது. நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் 2.92 சதவீத பள்ளிகளில், அதாவது, 32 ஆயிரம் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை. இதில், 15 ஆயிரத்து 791 பள்ளிகள், துவக்கப் பள்ளிகள். மற்றவை, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள். இந்த பட்டியலில் கர்நாடகா தான் முன்னணியில் உள்ளது. அங்குள்ள, ஏழாயிரத்து 945 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை. மேலும், 69 ஆயிரத்து 353 பள்ளிகளில்,ஒவ்வொரு பள்ளியிலும், 25 மாணவர்களுக்கு குறைவாகத் தான் படிக்கின்றனர். ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 888 பள்ளிகளில், 26 முதல் 50 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். நாட்டில் உள்ள 23 ஆயிரம் பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் கூட இல்லை. அதே சமயம், 1.3 லட்சம் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வை மேற்கொண்ட சைலேந்திர சர்மா என்ற பேராசிரியர் கூறுகையில், "இவ்வாறு ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அந்த பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இருக்க மாட்டார் அல்லது ஆசிரியர் அல்லாத உதவியாளர்கள் தான் பாடம் நடத்துவர்' என்றார்.


(தினமலர், 06-08-2007)

0 மறுமொழிகள்: