இறக்கையில்லாத விமானம்

என்.ராமதுரை, தினமணி, தெரியுமா? 20-09-2006

வான் வழியே பயணம் செய்ய விமானம் தான் தேவை என்று சொல்ல முடியாது. ஆகாயக் கப்பல் எனப்படும் வாகனத்தின் மூலமும் பயணம் செய்ய முடியும். சொல்லப் போனால் விமானம் வந்ததற்கு முன்னர் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்ய 1928 முதல் 1937 வரை ஆகாயக் கப்பல்கள் (Airships) தான் பயன்படுத்தப்பட்டன. இப்போதைய விமானங்களில் பயணிகள் நன்கு சாய்ந்து கொண்டு செல்லலாமே தவிர பயணிகளுக்கென தனித்தனி அறை கிடையாது. ஆகாயக் கப்பல்களில் தனித்தனி அறைகள் இருந்தன. உணவுக் கூடம் இருந்தது. இன்னும் பல வசதிகளும் இருந்தன.

ஆகாயக் கப்பல்களை ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான பலூன் எனலாம். ஹைட்ரஜன் வாயு அடைக்கப்பட்ட பலூன்களை நீங்கள் பார்த்திருக்கலாம். நூலை விட்டால் உயரே பறந்து போய்விடும். ஹைட்ரஜன் வாயு காற்றை விட லேசானது என்பதே காரணம். இந்த வாயு நிரப்பப்பட்ட ஆகாயக் கப்பல் ஒன்றின் நீளம் 400 அல்லது 800 அடி வரை இருக்கலாம்.

இப்போதைய விமானங்களில் எஞ்சின்கள் இயங்காமல் நின்றுவிட்டால் அதோ கதி தான். ஆகாயக் கப்பலிலும் எஞ்சின்கள் உண்டு என்றாலும் எஞ்சின்கள் இயங்காவிட்டால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. அடிப்படையில் பலூன் என்பதால் அந்தரத்தில் ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் அவ்வளவு தான்.

ஆகாயக் கப்பல்களுக்கு இப்போதைய விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் கிடையாது. ஆகவே இவற்றை இறக்கை இல்லாத விமானம் என்றும் வருணிக்கலாம்.

ஆரம்ப நாட்களில் பட்டுத் துணியை கொண்டு முதலில் பலூன் வடிவம் பெறுகிற கூடு தயாரித்தனர். அதற்குள்ளாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய பலூன்கள் வைக்கப்பட்டன. ஆகாயக் கப்பல்களைக் கட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்ட போது வெளிப்புறக்கூடு லேசான அலுமினியத்தால் உருவாக்கப்பட்டது. பலூன் வடிவ ஆகாயக் கப்பலின் அடிப்புறத்தில் கட்டுமானம் கட்டப்பட்டு அதில் தான் இருக்கைகள், அறைகள், கட்டில்கள், உணவுக்கூடம் முதலியன அமைக்கப்பட்டன.

இப்போதைய விமானங்கள் போல ஆகாயக் கப்பல்கள் வேகமாகச் செல்லக்கூடியவை அல்ல. ஆகாயக் கப்பலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். இப்போதைய விமானங்கள் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கின்றன. ஆகாயக் கப்பல்கள் வெறும் ஆயிரம் அடி உயரத்தில் பறந்தன. வேண்டுமானால் அவற்றை மிகவும் தாழ்வாகவும் இயக்க முடியும். ஆகவே பறக்கின்ற இடத்துக்குக் கீழே உள்ள இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்க முடியும் என்ற வசதியும் இருந்தது.

வான் வழியே பயணம் செய்வது புதிய அனுபவம் என்பதால் மக்கள் ஆகாயக் கப்பல்களில் பயணம் செய்வதை விரும்பினர். எனினும் காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் ஆகாயக் கப்பல் மவுசு இழந்தது.

ஆகாயக் கப்பல்களின் வேகம் மிகக் குறைவு. ஜெர்மனியில் ஹிண்டன்பர்க் என்ற பெரிய ஆகாயக் கப்பல் ஐரோப்பாவிலிருந்து நியூயார்க் போய்ச் சேர 60 மணி நேரம் பிடித்தது. இது இப்போது ஜெட் விமான மூலம் சென்றால் ஆவதைப் போல ஐந்து மடங்கு நேரம் ஆகும்.

ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. பல ஆகாயக் கப்பல்கள் இவ்விதம் தீப்பிடித்து அழிந்தன. தவிர, தரையில் இறங்கியபின் இவற்றைக் கம்பத்தில் கட்டிப் போடுவதிலும் பிரச்சினை இருந்தது. அடிப்படையில் பலூன் என்பதால் கடும் காற்று அடித்தால் ஆகாயக் கப்பல்கள் எளிதில் சேதம் அடைந்தன. ஹிண்டன்பர்க் 1937-ல் நியூயார்க் நகரில் தீப்பிடித்து அழிந்ததைத் தொடர்ந்து ஆகாயக் கப்பல் சகாப்தம் முடிந்தது.

இப்போது வானிலிருந்து ரோந்துப் பணி, விளம்பரம் செய்வது, பெரிய விளையாட்டு விழாக்களின் போது டிவி நிறுவனங்களுக்காக வானிலிருந்து படம் பிடிப்பது போன்ற பணிகளுக்கு ஆகாயக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இல்லாத ஹீலியம் வாயு நிரப்பப்படுகிறது.

0 மறுமொழிகள்: