உலகை உலுக்கிய தாக்குதல் - ஹிரோஷிமா தினம்

ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவு நாள் இன்று(06-08-2007) உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

"லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த பி29 ரக "எனோலா கெய்' என்ற அமெரிக்க விமானம், 1945 ஆக., 6ல் காலை 8.15க்கு ஹிரோஷிமா நகரின் மையப் பகுதியை நோக்கி உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது, நான்கு சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு ஹிரோஷிமாவில் நடந்தது என்ன என்பதே ஜப்பானுக்கு தெரியவில்லை. பேரழிவு நிகழ்ந்திருப்பதை மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் ஏறத்தாழ மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் அந்த பகுதியில் வசித்தனர். இவர்களும் உயிரிழக்க நேரிடும் என தெரிந்த போதும், ஜப்பானை பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு மேலோங்கி இருந்தது. குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன், ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். இதன் பிறகே, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது ஜப்பான் உட்பட உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. 1945 ஆக., 9ல் நாகசாகி மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த தாக்குதலால், இரு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து, ஆக., 10ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டது ஜப்பான். யுத்தத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகவும், கடைசி முறையாகவும் இருந்தது. அமெரிக்காவின் தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அணு ஆயுதத்தால் எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே புதிராக இருந்ததால், அதை பரிசோதிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வலுவான நிலையிலிருந்த ஜப்பான் பின்வாங்கிய பிறகும், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கேள்விகளை எழுப்பியது. மேலும், பல ஜப்பான் நகரங்களில் அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டது பின்னர் தெரிய வந்தது. "போரினால் ஏற்கனவே ஜப்பான் அழிந்திருந்தது. அந்த நாடே முடங்கிப் போயிருந்தது. அதை அழிக்க அணுகுண்டே தேவைப்படவில்லை' என இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் மறைந்த பிரிட்டன் பிரதமர் சர்ச்சில். உலக நாடுகளின் அனுதாபத்தை ஜப்பானுக்கு தேடித் தந்த நிகழ்ச்சி இது. அணு ஆயுதத்தின் பயங்கரத்தை உலகம் உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்தது ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் நிகழ்ந்த பேரழிவு சம்பவம்.

- இன்று(06-08-2007) ஹிரோஷிமா தினம்


(தினமலர், 06-08-2007)

0 மறுமொழிகள்: