அமெரிக்காவை கலக்கும் மிளகாய் "ஸ்ப்ரே!'

"என்னது, மிளகாய் ஸ்ப்ரேயா...?' என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்! உண்மை தான்! அமெரிக்காவில், இது சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, சைனஸ், மூக்கடைப்பு போக்க வந்துள்ள வல்லமை பெற்ற மருந்துதான் மிளகாய் ஸ்ப்ரே. ஒரு சொட்டு, மூக்கில் அடித்துக் கொண்டால், மூக்கடைப்பு எல்லாம் போயே போச்...!

இருமல், சளியை போக்க டாக்டர்கள் தரும் மருந்து, மாத்திரையில் உள்ள ரசாயனம், "காய் பென்சின்' என்பது. அந்த ரசாயனம், தொட்டாலே காரமெடுக்கும் பச்சை மிளகாயில் உள்ளது. அலர்ஜியை போக்க விற்பனையாகும் ஸ்ப்ரே, லோஷன், சிரப் எல்லாவற்றிலும், இந்த ரசாயனம் உள்ளது.

அமெரிக்காவில், வேறு எந்த கோளாறையும் முந்திவிட்டது சுவாசக் கோளாறு. அதிலும், அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுவோர் கோடி கணக்கில்! அவர்களுக்கு, "ஹாச்...உச்...' என்றால், உடனே மூக்கடைப்பு வந்துவிடும். சிலருக்கு எப்போதும் சைனஸ் தொல்லை உண்டு. இவர்கள் எப்போதும், மருந்து, மாத்திரையை நம்பித்தான் இருக்கின்றனர். அதனால், இருமல், சளி சிரப், மருந்து, மாத்திரைகள் அமோக விற்பனை. மருத்துவ பேராசிரியர் இர்வின் சிமந்த் கூறுகையில், "செயற்கையாக ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் இருமல் சிரப், மாத்திரை, மருந்திலாவது, பக்க விளைவுகள் இருக்கும்; ஆனால், மிளகாயில் தயாரிக்கப்படும் ஸ்ப்ரேயில், எந்த பக்க விளைவும் இல்லை. நுரையீரலில் சளி சேருவதற்கு காரணம் அலர்ஜி; அப்படி சளி சேருவதை தடுக்க உதவும் ரசாயனம், மிளகாயில் இயற்கையாகவே இருப்பதால் நல்ல பலன் தருகிறது!' என்றார்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களிலும், மருந்துக்கடைகளிலும் பிரபலமாக விற்கப்படுவது சினோல் நாசல் ஸ்ப்ரே, சைனஸ் பஸ்டர் ஆகிய இரு மிளகாய் மருந்துகளை மூக்கடைப்பு உள்ளவர்கள், இரண்டு சொட்டு விட்டுக் கொண்டால் போதும்... மாயமாக போய்விடும் அடைப்பு. இந்த மருந்துகளை தயாரித்த வெய்ன் பெர்ரி கூறுகையில், "பச்சை மிளகாய் மிகவும் காரமாக இருக்கும். மூக்கில் விட்டால் எரியத் தானே செய்யும். ஆனால், அதில் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. எனக்கு அடிக்கடி தலைவலி, சளி, இருமல் தொல்லை, மூக்கடைப்பு உண்டு. ஆனால், நான் மிளகாயை பயன்படுத்தியதை அடுத்து, பாதிப்பு வரவே இல்லை. அதனால் தான், மிளகாய் ஸ்ப்ரேயை உருவாக்கினேன். இப்போது பல லட்சம் பேருக்கு பலன் தருகிறது; பணமும் கொட்டுகிறது!' என்றார்.

"இயற்கையான சத்து என்பதால், மிளகாய் ஸ்ப்ரே, மூக்கடைப்பு போன்ற அலர்ஜி கோளாறுகளுக்கு உடனடி தீர்வாக உள்ளது. எல்லா அலர்ஜி பாதிப்புகளுக்கும் இதை பயன்படுத்தலாம்!' என்று நியூயார்க் மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் ஆலென் பிரஸ்மன் கூறினார்.


தினமலர்-வாரமலர் 19-08-2007

வரலாற்று சம்பவங்களை விளக்க புது யுக்தி : தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்

சென்னை : வரலாற்றுச் சம்பவங்களால் நேரில் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அச்சம்பவங்களை விளக்கி வரலாற்றை எடுத்துரைக்கும் முறையை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) கையாண்டுள்ளது.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வரலாற்றை எடுத்துரைக்க புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது. வாய்மொழி கதைகள், வரலாற்று குறிப்புகள், டைரிகள், நேரடி கையெழுத்து ஆவணங்கள் மூலமாக வரலாற்றை கற்பிக்க தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய வரலாற்று கட்டுரைகள்பகுதி மூன்று' என்ற புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் "பிரிவினையை புரிந்து கொள்ளுவது' என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் நேரடி அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லாகூர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியாற்றிய அப்துல் லத்தீப் என்பவரை 1993ம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி., ஆய்வாளர் சந்தித்து அவரது அனுபவத்தை பெற்றுள்ளார். அப்துல் லத்தீப், 1947ம் ஆண்டு ஜம்முவில் நடந்த கலவரத்தின் போது தனது தந்தைக்கு இந்து மூதாட்டி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். லாகூர் இளைஞர் விடுதியின் மேலாளரான இக்பால் அகமதுவின் அனுபவமும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் 1950ம் ஆண்டுகளில் கிளார்க்காக பணியாற்றி இக்பால் அகமது, தான் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதை அறிந்து, தனக்கு அறிமுகமில்லாத சீக்கியர் தன்னை கட்டித் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியதை விவரித்துள்ளார்.


தினமலர், 20-08-2007