அமெரிக்காவை கலக்கும் மிளகாய் "ஸ்ப்ரே!'

"என்னது, மிளகாய் ஸ்ப்ரேயா...?' என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்! உண்மை தான்! அமெரிக்காவில், இது சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, சைனஸ், மூக்கடைப்பு போக்க வந்துள்ள வல்லமை பெற்ற மருந்துதான் மிளகாய் ஸ்ப்ரே. ஒரு சொட்டு, மூக்கில் அடித்துக் கொண்டால், மூக்கடைப்பு எல்லாம் போயே போச்...!

இருமல், சளியை போக்க டாக்டர்கள் தரும் மருந்து, மாத்திரையில் உள்ள ரசாயனம், "காய் பென்சின்' என்பது. அந்த ரசாயனம், தொட்டாலே காரமெடுக்கும் பச்சை மிளகாயில் உள்ளது. அலர்ஜியை போக்க விற்பனையாகும் ஸ்ப்ரே, லோஷன், சிரப் எல்லாவற்றிலும், இந்த ரசாயனம் உள்ளது.

அமெரிக்காவில், வேறு எந்த கோளாறையும் முந்திவிட்டது சுவாசக் கோளாறு. அதிலும், அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுவோர் கோடி கணக்கில்! அவர்களுக்கு, "ஹாச்...உச்...' என்றால், உடனே மூக்கடைப்பு வந்துவிடும். சிலருக்கு எப்போதும் சைனஸ் தொல்லை உண்டு. இவர்கள் எப்போதும், மருந்து, மாத்திரையை நம்பித்தான் இருக்கின்றனர். அதனால், இருமல், சளி சிரப், மருந்து, மாத்திரைகள் அமோக விற்பனை. மருத்துவ பேராசிரியர் இர்வின் சிமந்த் கூறுகையில், "செயற்கையாக ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் இருமல் சிரப், மாத்திரை, மருந்திலாவது, பக்க விளைவுகள் இருக்கும்; ஆனால், மிளகாயில் தயாரிக்கப்படும் ஸ்ப்ரேயில், எந்த பக்க விளைவும் இல்லை. நுரையீரலில் சளி சேருவதற்கு காரணம் அலர்ஜி; அப்படி சளி சேருவதை தடுக்க உதவும் ரசாயனம், மிளகாயில் இயற்கையாகவே இருப்பதால் நல்ல பலன் தருகிறது!' என்றார்.

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களிலும், மருந்துக்கடைகளிலும் பிரபலமாக விற்கப்படுவது சினோல் நாசல் ஸ்ப்ரே, சைனஸ் பஸ்டர் ஆகிய இரு மிளகாய் மருந்துகளை மூக்கடைப்பு உள்ளவர்கள், இரண்டு சொட்டு விட்டுக் கொண்டால் போதும்... மாயமாக போய்விடும் அடைப்பு. இந்த மருந்துகளை தயாரித்த வெய்ன் பெர்ரி கூறுகையில், "பச்சை மிளகாய் மிகவும் காரமாக இருக்கும். மூக்கில் விட்டால் எரியத் தானே செய்யும். ஆனால், அதில் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. எனக்கு அடிக்கடி தலைவலி, சளி, இருமல் தொல்லை, மூக்கடைப்பு உண்டு. ஆனால், நான் மிளகாயை பயன்படுத்தியதை அடுத்து, பாதிப்பு வரவே இல்லை. அதனால் தான், மிளகாய் ஸ்ப்ரேயை உருவாக்கினேன். இப்போது பல லட்சம் பேருக்கு பலன் தருகிறது; பணமும் கொட்டுகிறது!' என்றார்.

"இயற்கையான சத்து என்பதால், மிளகாய் ஸ்ப்ரே, மூக்கடைப்பு போன்ற அலர்ஜி கோளாறுகளுக்கு உடனடி தீர்வாக உள்ளது. எல்லா அலர்ஜி பாதிப்புகளுக்கும் இதை பயன்படுத்தலாம்!' என்று நியூயார்க் மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் ஆலென் பிரஸ்மன் கூறினார்.


தினமலர்-வாரமலர் 19-08-2007

வரலாற்று சம்பவங்களை விளக்க புது யுக்தி : தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்

சென்னை : வரலாற்றுச் சம்பவங்களால் நேரில் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அச்சம்பவங்களை விளக்கி வரலாற்றை எடுத்துரைக்கும் முறையை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) கையாண்டுள்ளது.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வரலாற்றை எடுத்துரைக்க புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது. வாய்மொழி கதைகள், வரலாற்று குறிப்புகள், டைரிகள், நேரடி கையெழுத்து ஆவணங்கள் மூலமாக வரலாற்றை கற்பிக்க தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய வரலாற்று கட்டுரைகள்பகுதி மூன்று' என்ற புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் "பிரிவினையை புரிந்து கொள்ளுவது' என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் நேரடி அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லாகூர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியாற்றிய அப்துல் லத்தீப் என்பவரை 1993ம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி., ஆய்வாளர் சந்தித்து அவரது அனுபவத்தை பெற்றுள்ளார். அப்துல் லத்தீப், 1947ம் ஆண்டு ஜம்முவில் நடந்த கலவரத்தின் போது தனது தந்தைக்கு இந்து மூதாட்டி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். லாகூர் இளைஞர் விடுதியின் மேலாளரான இக்பால் அகமதுவின் அனுபவமும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் 1950ம் ஆண்டுகளில் கிளார்க்காக பணியாற்றி இக்பால் அகமது, தான் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதை அறிந்து, தனக்கு அறிமுகமில்லாத சீக்கியர் தன்னை கட்டித் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியதை விவரித்துள்ளார்.


தினமலர், 20-08-2007

முக்கியத்துவம் பெறும் அகல ரயில் பாதை: நூற்றாண்டை நோக்கி பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மற்றும் புதிய துறை முகங்களால் அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெற வாய்ப்பு உள்ளது.

ஆங்கிலேயர்களால் 1914 ல் மண்டபம் ராமேஸ்வரம் இடையே துவக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்தில் சென்னை போட் மெயில், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர், திருப்பதி எக்ஸ்பிரஸ், மண்டபம் வாட்டர் டேங்க் என பல ரயில்கள் ஓடியது.

வியாபார நிமித்தமாகவும், இலங்கைக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கப்பட்ட ரயில் போக்குவரத்துக்கு, இடையூறாக இருந்த பாம்பன் கடல் மீது 1913 ல் கட்டப்பட்ட ஸ்ஜெட்ஜர் பாலம் நூற்றாண்டை கடக்க உள்ள வேளையில் ராமேஸ்வரம் கோயில் முக்கியத்துவம் கருதியும், சேது சமுத்திர கப்பல் கால்வாய், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சத்துக்காகவும் மத்திய அரசு மதுரை ராமேஸ்வரம் அகல ரயில் திட்டத்தை ரூ 240 கோடியில் நிறைவேற்றியுள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள ரயில் பாலம், இந்திய தொழில் நுட்பத்தால் அகல ரயில் பாலமாக மாற்றப்பட்டது. இதற்காக மட்டும் ரூ. 24 கோடி செலவிடப்பட்டது.தென் இந்திய ரயில்வே பாலங்கள் முதன்மை இன்ஜினியர் சின்ஹா தலைமையில் 10 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டது. அதன்படி 92 ஆண்டுகளுக்கு பின் கடந்த 12.8.2007 ல் ராமேஸ்வரம் மானாமதுரை அகல ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து இப்பாலத்தின் வழியாக சென்னைக்கு முதல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. மதுரை மற்றும் சென்னைக்கு முதல் கட்டமாக தற்போது 3 ரயில்கள் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முடிந்ததும் காசி, புவனேஸ்வர், மும்பை, டில்லி,கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வடமாநிலங்களிலிருந்து யாத்திரை வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சிரமமின்றி நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்ய முடியும். சேது சமுத்திரம் திட்டம், ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து, தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து, புதிய துறைமுகங்கள் போன்ற திட்டங்களும் செயல்வடிவம் பெறும் போது அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெறும். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு அம்சத்திலும் கூடுதல் முக்கியத்துவம் பெறும்.


தினமலர், 19-08-2007

சேதுக்கால்வாய் தோண்டும் பணியால் கடல் பகுதி சுற்றுச்சூழல் பாதிக்காது - சென்னை பல்கலை துணை வேந்தர் தகவல்

ராமேஸ்வரம் : சேதுக்கால்வாய் தோண்டும் பணி நடைபெறுவதால் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 2008 நவம்பரில் கால்வாய் தோண்டும் பணி முடிவடையும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேதுசமுத்திர கால்வாய் தோண்டும் பணியினால் கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தின் இயக்குனர் சுரேஷ் (பொறுப்பு), சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தற்போது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் நடந்து வரும் கால்வாய் தோண்டும் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவரும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருமான ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது. தனுஷ்கோடி கடலில் மணல் தூர் வாரும் பணியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கப்பல் வொர்ஜினா உட்பட 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. கடலில் தோண்டவேண்டிய 89 பில்லியன் கியூபிக் மீட்டரில் இதுவரை 24 பில்லியன் கியூபிக் மீட்டர் மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் தோண்டப்படும் பகுதியில் கடல்நீர் மற்றும் மண்ணின் தன்மை குறித்து தினமும் 12 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது.தோண்டும் பகுதியையொட்டிய கடற்கரைபகுதியில் கடல் நீரோட்டம் மற்றும் ஏற்ற தாழ்வுகளும் வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. கடலில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை. கடல் சுற்றுச்சூழல் என்பது கடலில் உருவாவதை விட நிலப்பகுதியில் இருந்து செல்லும் கழிவுகளால்தான் அதிகளவில் கடல் சுற்றுச்சூழல் பாதிக்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், பாம்பன் உட்பட 11 இடங்களில் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு கடல் வளம், கடல் உயிரின பெருக்கம் குறித்து சர்வே செய்யப்பட்டதில் மீன்வளம் கடந்த காலத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணிகள் முடிந்து 2008 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்காணிப்பு இன்ஜினியர் மாணிக்கம், ராமேஸ்வரம் அலுவலக பொறுப்பு இன்ஜினியர் முத்துஉடையார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர், 19-08-2007

கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கல்வியாளர்களிடம் பாடம் படிக்க வேண்டும் : ராமதாஸ் யோசனை

சென்னை : "தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வியாளர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று பா.ம.க., தலைவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் மற்றும் சமூக கல்விக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து, "பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமைப் பள்ளி முறை' குறித்து சென்னையில் நேற்று கருத்தரங்கு நடத்தியது. இதில், பா.ம.க., தலைவர் ராமதாஸ் பேசியதாவது:கல்வி, பாடத் திட்டங்கள் எல்லாமே தலை கீழாக உள்ளது. இதற்கு ஒரு யோசனை சொல்லலாம் என்றால் பயமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அந்த திட்டத்தை அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வி அறிஞர்கள் குழுவிடம் பாடம் கற்க வேண்டும். மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு தமிழ் வழிக் கல்வி தான் சிறந்தது. நாங்கள் எல்லாம் தமிழ் வழியில் தான் படித்தோம். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழ் வழி கல்வி தான் உயர்ந்த நிலையில் இருந்தது. அவன் போனபிறகு ஆங்கிலம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டது.வீட்டில் தேவைப்பட்டால் தமிழ் பேசுகிற நிலை இருக்கிறது. இப்படி பேசினால் ஆங்கில விரோதி, தமிழ் வெறியன் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கலாம். தற்போதுள்ள கல்வி முறையால் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழும் முழுமையாக தெரியவில்லை; ஆங்கிலமும் முழுமையாக தெரியவில்லை. இது தான் உண்மை. ஒருமொழிக் கொள்கை உன்னதக் கொள்கை. ஒரு மொழியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இருமொழிக் கொள்கை, தமிழை விரட்டி விட்டது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஆரம்பப் பள்ளிகளையும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமை பள்ளி முறையை கொண்டு வர வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொதுப்பள்ளி முறை தான் அமலில் இருக்கிறது. பிரதமர் வீட்டு குழந்தைகளும், சாதாரண ஏழை வீட்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அந்த நிலை இங்கு வர வேண்டும். கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி, தரமான கல்வி, அனைவருக்கும் கல்வி ஆகியவை தேவை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி மற்றும் கல்வியாளர் ராஜகோபால் ஆகியோரும், பொதுப்பள்ளி மற்றும் அருகாமை பள்ளி முறைகளின் அவசிய தேவை குறித்து விரிவாக பேசினர்.


தினமலர், 19-08-2007

பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டுபிடிப்பு

பழநி : பழநி அருகே பாண்டியர் கால குடவறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய பண்பாட்டு துறையின் முன்னாள் மாணவர் நாட்டுத்துரை, மாணவர்கள் தங்கதுரை, ரங்கநாயகன், பழனியாண்டவர் கல்லூரியின் முதல்வர் ஜெயபாலன், பேராசிரியர் வைரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.பழநியில் இருந்து வட கிழக்கில் 22 கி.மீ., துõரத்தில் கூத்தம்பூண்டியான் வலசில் உள்ள மாயவன் மலை பாறையின் அடிப்பகுதியில் ஒரு முற்றுப்பெறா குடவறை காணப்பட்டது.

இது திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக கண்டறியப்பட்ட குடவறை என்பது சிறப்பு அம்சமாகும். இக்குடவறையானது தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 10.5 மீட்டர் நீளத்திலும், 4 மீட்டர் உயரத்திலும் குடையப்பட்டுள்ளது. பாறையினை 60 செ.மீ., வரை உள்நோக்கி குடைந்து அதில் 4 தூண்களையும் அமைத்து ஏதோ ஒரு காரணத்தினால் முற்றுப்பெறாமல் உள்ளது. இதன் காலத்தை கணக்கிட கல்வெட்டுகளோ , வேறு ஆதாரங்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் இது பாண்டியர் கால குடவறை மரபினை சேர்ந்ததாக காணப்படுகிறது. முதலில் குடவறை அமைப்பதற்கான "மாதிரி செதுக்கு படிவ முறை' கையாளப்பட்டதற்கான அமைப்பு முறையானது 7.80 மீட்டர் நீளத்திலும், 2.75 மீட்டர் உயரத்திலும் குடவறையின் வலது பக்கத்தில் காணப்படுகிறது.


தினமலர், 19-08-2007

பெரியாறு அணை அருகே புதிய அணை - அமைதி காக்கும் தமிழக அரசு

கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டங்களை தீட்டி உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.1895ல் கட்டப்பட்ட பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணை 15.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்டது. இதில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழ்நாடு பயன்படுத்த முடியும். கிட்டத்தட்ட 9 டி.எம்.சி., நீரை பயன்படுத்துவதில்லை. பெரியாறு அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை விவசாயம் தவிர மின் உற்பத்திக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான 9 ஆயிரத்து 777 சதுர கி.மீ.,க்கும், நீர் தேங்கியுள்ள 8 ஆயிரம் ஏக்கருக்கும் குத்தகைத் தொகையாக ரூ.40 ஆயிரத்தை கேரள அரசிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு செலுத்தி வந்தது. 1960க்குப் பின்பு குத்தகை தொகை உயர்த்தி ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 789 ஐ ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது.

பாசனப்பரப்பு: பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் லோயர்கேம்பில் பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் பெரியாறு வழியாக வைகை அணையை சென்றடையும். வைகை அணையில் இருந்து பேரணை வழியாக மேலூர், சோழவந்தான், நிலக் கோட்டை, செக்கானூரணி, திருமங்கலம், திருப்பத்தூர், கள்ளந்திரி, திருப்புவனம், சிவகங்கை, இடையமேலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இதன் மொத்த பாசனப்பரப்பு 2 லட்சத்து 8 ஆயிரத்து 144 ஏக்கராகும். இந்த நீரின் மூலம் 65 லட்சம் மக்கள் நேரடியாகவும், ஒரு கோடி மக்கள் மறைமுகமாகவும் பயன்பெற்றனர்.


தமிழக அரசின் கவனக்குறைவு: பெரியாறு அணை நீர்மூலம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் இரு போக விவசாயம், குடிநீர், மின்சார உற்பத்தி என திருப்திகரமாக இருந்த நிலையில் 1979ல் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. இந்த புகாரைத் தொடர்ந்து ரூ.பல கோடி மதிப்பீட்டில் அணையை தமிழக அரசு பலப்படுத்தியது. பலப்படுத்தும் பணி முடிவடையும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிலைநிறுத்துவது எனவும், பணி முடிவடைந்தவுடன் மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது. பலப்படுத்தும் பணி முடிவடைந்தபின்பும் பல்வேறு புகார்களைக் கூறி நீர் மட்டம் உயர்த்துவதை கேரள அரசு தடுத்தது. இதனால் பெரியாறு அணை நீரை நம்பி இருந்த தென் தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடியாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மேலும் பல புதிய புகார்களைக் கூறி தடுத்து வருகிறது. பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு முதன்முதலில் புகார் கூறத் துவங்கியதில் இருந்து தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் கேரள அரசு ஏற்றுக் கொள்ளாத நிலை வரை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை எதுவும் இல்லாததால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

136க்கு மேல் உயர்த்த முடியுமா?: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என அனைத்து அம்சங்களும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்து வந்த நிலையில் கேரள அரசின் இடைஞ்சல்களால் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. இனிமேலும், நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து விட முடியுமா என்பதில் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயராமல் இருக்கும் வகையில் தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க புதிய திட்டத்தை வழிவகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

தமிழகப்பகுதிக்கு நீர் எடுக்கும் வழிகள்: பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 4 ராட்சத பைப் மூலம் மின் நிலையம் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் நீர் எடுக்க முடியும். ராட்சத பைப்புகளில் தலா 400 கன அடி வீதம் 4 பைப்புகளில் ஆயிரத்து 600 கன அடி நீர் எடுக்கலாம். இவ்வாறு முழு அளவில் நீர் எடுக்க வேண்டுமெனில் 4 ஜெனரேட்டர்களும் பழுது ஏற்படா வண்ணம் எப்போது மின் உற்பத்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டால் நீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும்.


பாலைவனவாக மாற உள்ள தென்தமிழகம்: பெரியாறு அணைப் பிரச்னையில் 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பது கேரளாவின் கோரிக்கை. 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும் அதை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக அரசு. தமிழக கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால் பெரியாறு அணை நீரை நம்பியுள்ள தென் தமிழகம் பாலைவனமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் அவ்வப்போது போராட்டம் நடத்துவதோடு சரி. அதன்பின்பு அந்த விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இதை அரசும் கருத்தில் கொள்வதில்லை. இதனால், பெரியாறு அணை நீரை எவ்வளவு அதிகமாக தமிழகப்பகுதிக்கு எடுக்க முடியுமோ அதற்கான புதிய திட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நீரை சேமிக்க அணைகள் இல்லை: பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் எடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். அதே வேளையில் தென் தமிழகத்தில் நீரை சேமிக்க போதிய அளவு அணைகள் இல்லாதது. வேதனையான விஷயம். 1958ல் தேனி மாவட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஒரு அணையிலும் தற்போது 25 அடி வரை வண்டல் மண் தேங்கியுள்ளதால் கூடுதல் தேக்கப்படும் நீரின் கொள்ளளவும் குறைந்துள்ளது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் நீரை சேமிக்கும் அளவிற்கு கடந்த 50 ஆண்டுகளில் வைகை அணையைத் தவிர எந்த அணையும் தென்தமிழகத்தில் கட்டப்படவில்லை. மதுரை அருகில் உள்ள விரகனூர் அணையும், பார்த்திபனூர் அணையும் வரும் நீரை தடுக்க மட்டுமே முடியும் வகையில் உள்ள தடுப்பணையாகத்தான் உள்ளதே தவிர வைகை அணை போல் நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு இல்லை. கர்நாடகா காவேரியில் இருந்து வரும் நீர் தேக்கி வைக்க கபிணி, ஹேலங்கி உட்பட 7 அணைகள் கட்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பிரச்னைக்குரிய பெரியாறுஅணை நீரை சேமிக்க எந்த அணையும் கட்ட தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. இந்த நிலை இப்படியே போனால் தென் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாற உள்ளதை தடுக்க முடியாது.

அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்: பெரியாறு அணை நீரை நம்பியுள்ள பாசனப்பகுதிகளான கம்பம், தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, மத்திய தொகுதி, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரியகுளம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 லோக்சபா தொகுதி எம்.பி.,க்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் நடத்தி விட்டு கப்சிப் என இருந்து விடுகின்றனர். இவர்கள் தவிர எண்ணிலடங்கா அரசியல்பிரமுகர்கள் தொடர் நடவடிக்கை எதிலும் இறங்காமல் எனக்கென்ன என்று மவுனமாக இருக்கின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளைப் பொறுத்தவரை ஏலம், மிளகு, காப்பி, ரப்பர் ஆகிய விவசாயங்களை கேரளாவில் அதிக அளவில் செய்து வருகின்றனர். பெரியாறு அணைப் பிரச்னையை கையில் எடுத்து போராடினால் கேரளாவில் உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என ஒதுங்கியே உள்ளனர்.பிரச்னைக்கு தீர்வு: ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில கட்சியினர், ஒரு சில விவசாயிகள் என போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.

புதிய அணை கட்ட நடவடிக்கை: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு கேரள அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கேரள சட்டசபையில் இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கு ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வுப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாகவே உள்ளது. தமிழக அரசின் இந்த அமைதி நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன வழி உள்ளது என்பதை தமிழக அரசு ஆராய்ந்து அதற்கான உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கேரள அரசு என்ன சொல்கிறது?: 1976ம் ஆண்டு கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டியது. 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை, பெரியாறு அணையை விட 4 மடங்கு பெரியது. இடுக்கி அணையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் கட்டியது. இடுக்கி அணை கட்டுவதற்கு முன்பு வரை பெரியாறு அணை பிரச்னையின்றி இருந்தது. இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1979ல் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரள அரசு புகார் கூறத் துவங்கியது. பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் உள்ள நீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று விடலாம் என்ற திட்டத்தில் புகார்களை கேரள அரசு அடுக்கிக் கொண்டே வருகிறது.பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது என தொடர்ந்து புகார் கூறி வரும் கேரள அரசு, 136 அடிக்கு கீழ் உள்ள நீரை தமிழகம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எவ்வளவு நீர் வேண்டுமென்றாலும் தமிழகம் எடுத்துக் கொள்ளட்டும் என ஒவ்வொரு முறையும் பெரியாறு அணையைப் பார்வையிட வரும் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் கூறிக் கொண்டுதான் உள்ளனர். பெரியாறு அணையில் இருந்து 136 அடிக்கு கீழ் உள்ள நீரை மேலும் ஒரு சுரங்கம் அமைத்து கூடுதல் நீரை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டால் இப்பிரச்னைக்கு முடிவு வந்து விடும் என இடுக்கி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., யின் தலைவராக இருந்த பி.ஏ.ஜோசப் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அமைச்சர்கள் மற்றும் கேரள அதிகாரிகளின் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அவரின் கருத்தை கேரள தரப்பில் இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதனால் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் நீர் எடுக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்ந்து அதை மேற்கொள்ளவேண்டியது தமிழக அரசின் அவசியமாகும்.

தினமலர், 19-08-2007