முக்கியத்துவம் பெறும் அகல ரயில் பாதை: நூற்றாண்டை நோக்கி பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மற்றும் புதிய துறை முகங்களால் அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெற வாய்ப்பு உள்ளது.

ஆங்கிலேயர்களால் 1914 ல் மண்டபம் ராமேஸ்வரம் இடையே துவக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்தில் சென்னை போட் மெயில், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர், திருப்பதி எக்ஸ்பிரஸ், மண்டபம் வாட்டர் டேங்க் என பல ரயில்கள் ஓடியது.

வியாபார நிமித்தமாகவும், இலங்கைக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கப்பட்ட ரயில் போக்குவரத்துக்கு, இடையூறாக இருந்த பாம்பன் கடல் மீது 1913 ல் கட்டப்பட்ட ஸ்ஜெட்ஜர் பாலம் நூற்றாண்டை கடக்க உள்ள வேளையில் ராமேஸ்வரம் கோயில் முக்கியத்துவம் கருதியும், சேது சமுத்திர கப்பல் கால்வாய், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சத்துக்காகவும் மத்திய அரசு மதுரை ராமேஸ்வரம் அகல ரயில் திட்டத்தை ரூ 240 கோடியில் நிறைவேற்றியுள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள ரயில் பாலம், இந்திய தொழில் நுட்பத்தால் அகல ரயில் பாலமாக மாற்றப்பட்டது. இதற்காக மட்டும் ரூ. 24 கோடி செலவிடப்பட்டது.தென் இந்திய ரயில்வே பாலங்கள் முதன்மை இன்ஜினியர் சின்ஹா தலைமையில் 10 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டது. அதன்படி 92 ஆண்டுகளுக்கு பின் கடந்த 12.8.2007 ல் ராமேஸ்வரம் மானாமதுரை அகல ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து இப்பாலத்தின் வழியாக சென்னைக்கு முதல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. மதுரை மற்றும் சென்னைக்கு முதல் கட்டமாக தற்போது 3 ரயில்கள் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முடிந்ததும் காசி, புவனேஸ்வர், மும்பை, டில்லி,கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வடமாநிலங்களிலிருந்து யாத்திரை வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சிரமமின்றி நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்ய முடியும். சேது சமுத்திரம் திட்டம், ராமேஸ்வரம்இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து, தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து, புதிய துறைமுகங்கள் போன்ற திட்டங்களும் செயல்வடிவம் பெறும் போது அகல ரயில் போக்குவரத்து இன்னும் முக்கியத்துவம் பெறும். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு அம்சத்திலும் கூடுதல் முக்கியத்துவம் பெறும்.


தினமலர், 19-08-2007

0 மறுமொழிகள்: