ராமேஸ்வரம் : சேதுக்கால்வாய் தோண்டும் பணி நடைபெறுவதால் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 2008 நவம்பரில் கால்வாய் தோண்டும் பணி முடிவடையும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேதுசமுத்திர கால்வாய் தோண்டும் பணியினால் கடலில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தின் இயக்குனர் சுரேஷ் (பொறுப்பு), சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தற்போது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் நடந்து வரும் கால்வாய் தோண்டும் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவரும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருமான ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது. தனுஷ்கோடி கடலில் மணல் தூர் வாரும் பணியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கப்பல் வொர்ஜினா உட்பட 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. கடலில் தோண்டவேண்டிய 89 பில்லியன் கியூபிக் மீட்டரில் இதுவரை 24 பில்லியன் கியூபிக் மீட்டர் மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் தோண்டப்படும் பகுதியில் கடல்நீர் மற்றும் மண்ணின் தன்மை குறித்து தினமும் 12 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது.தோண்டும் பகுதியையொட்டிய கடற்கரைபகுதியில் கடல் நீரோட்டம் மற்றும் ஏற்ற தாழ்வுகளும் வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. கடலில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை. கடல் சுற்றுச்சூழல் என்பது கடலில் உருவாவதை விட நிலப்பகுதியில் இருந்து செல்லும் கழிவுகளால்தான் அதிகளவில் கடல் சுற்றுச்சூழல் பாதிக்படுகிறது. ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், பாம்பன் உட்பட 11 இடங்களில் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு கடல் வளம், கடல் உயிரின பெருக்கம் குறித்து சர்வே செய்யப்பட்டதில் மீன்வளம் கடந்த காலத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணிகள் முடிந்து 2008 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்காணிப்பு இன்ஜினியர் மாணிக்கம், ராமேஸ்வரம் அலுவலக பொறுப்பு இன்ஜினியர் முத்துஉடையார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தினமலர், 19-08-2007
மதியம் 13.10.07
சேதுக்கால்வாய் தோண்டும் பணியால் கடல் பகுதி சுற்றுச்சூழல் பாதிக்காது - சென்னை பல்கலை துணை வேந்தர் தகவல்
வலையாக்கம்: ம. எட்வின் பிரகாசு நாளும் நேரமும்: மதியம் சனி, அக்டோபர் 13, 2007
தலைப்புகள்
தமிழன் கால்வாய்,
தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment