பாதி விலையில் அதிசய வீடு எந்த பேரழிவையும் தாங்கும் மின், குடிநீர் இணைப்பும் தேவையில்லை

புதுடில்லி: மனிதனாலும், இயற்கையாலும் ஏற்படும் அழிவை எதிர்கொள்ளக்கூடிய வீடுகளை டில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு கட்டித்தர முன்வந்துள்ளது ஜெர்மன் நாட்டை சேர்ந்த, "கிரானைட் ரெசின்' நிறுவனம்.

இந்த வீடுகள், தீ பற்றாதவை, பூகம்பத்தை தாங்கக்கூடியவை, வெள்ளம் வந்தால் தண்ணீரில் மிதக்கக்கூடியவை, எரிமலைகுழம்புகளையும் தாங்க வல்லவை.

இதில் சிறப்பம்சம், ஒரே நாளில் ஒரு வீட்டை கட்டிவிட முடியும்; செங்கல் மற்றும் கான்கிரீட் வீடுகளை விட பாதி செலவு தான் ஆகும். இந்த வீடுகளுக்கென தனியாக மின் இணைப்போ அல்லது குடிநீர் இணைப்போ தேவையில்லை. இந்த வீடே இவற்றை தானாக உற்பத்தி செய்து கொள்ளும் என்பது இன்னொரு சிறப்பம்சம். வழக்கமாக கடைப்பிடிக்கும் முறைப்படி செங்கற்களால் இந்த வீட்டின் சுவர்கள் கட்டப்படுவதில்லை. தேவையான நீள, அகலத்துக்கு தயாரிக்கப்படும் சுவர்கள், வீடு கட்டப்பட உள்ள இடத்துக்கு எடுத்து சென்று, அப்படியே பொருத்தப்படும். இந்த சுவர்கள் நவீன தொழில் நுட்பத்தின் கீழ், தனித்தன்மையுடன் வடிவமைக்கப்படுகின்றன. சுவர் மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும். நடுப்பகுதியில் பஞ்சு போன்ற மின்கடத்தா பொருள் உள்ளது. மற்ற இரண்டு அடுக்குகளும், சணல் நார் மற்றும் கண்ணாடி இழைகளை கொண்டு தயாரிக்கப்படும், "கிரானைட் ரெசின்' என்ற பொருளால் தயாரிக்கப்படுவது.

இந்த சுவர், எல்லா வகையான தட்ப வெப்ப நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் கொண்டது. சுவர்களை நிறுத்தி, ஒரு சுவருடன் இன்னொரு சுவர் ஒட்டவைக்கப்படும். இதற்கு விசேஷ ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சுவரை இன்னொரு சுவரோடு ஒட்டுவதற்கு, இந்த ரசாயன பசையை தடவினால், இரண்டு மணி நேரத்தில் சுவர்கள் இரண்டும் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும். இந்த சுவர்களை தீ தாக்க முடியாது. அதே போல, வீட்டுக்கு வெளியில் அதிக சத்தம் இருந்தாலும், வீட்டுக்குள் அந்த சத்தம் கேட்காது. எனவே, சாலை ஓரத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டாலும், சாலைகளில் ஓடும் வாகன இரைச்சலால் தொந்தரவு இருக்காது. அடுத்தது வீட்டின் மேற்கூரை. இதுவும் ரெடிமேட் தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கூரைகள் சுவரை ஒட்டுவதைப் போல, ஒட்டப்பட்டு கூரைகளின் மேல், சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக்கூடிய சூரியசக்தி கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம், வீட்டுக்கு இரவு பகல் எந்த நேரத்திலும் தேவையான மின்சாரம் கிடைக்கும். எனவே மின் இணைப்பு தேவை இல்லை. ஏர்கண்டிஷன் மற்றும் ஹீட்டர் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரியசக்தி கண்ணாடிகள் அமைக்கப்படும். அடுத்ததாக தண்ணீர். இந்த வீடுகளில், மழைநீரை சேகரித்து வைக்க தனி இடம் உள்ளது. இந்த மழைநீர், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டி மூலம் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர் சப்ளை கிடைக்கும். பயன்படுத்தப்படும் தண்ணீரும் மறுபடியும் சுத்திகரிப்பு தொட்டிக்கு வந்து சேரும். அந்த நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நல்ல குடிநீராக மாறி, பயன்பாடுக்கு வந்துவிடும். துõசுகள் மட்டுமின்றி, பாக்டீரியாவைக்கூட சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இந்த சுத்திகரிப்பு தொட்டி வீட்டில் பொருத்தப்படும். எனவே, குடிநீருக்கோ, மின்சாரத்துக்கோ எந்த இணைப்பும் தேவை ஏற்படாது. இந்த வீடு எடை குறைந்தது என்பதால், வீட்டுக்குள் வெள்ளம் புகாது. தண்ணீரில் வீடு மிதக்கும். அதை நகரச்செய்யாதபடி, வீட்டின் நான்கு மூலைகளிலும் நிலத்துக்கு மிக ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்திவார கயிறுகள் இறுக பிடித்துக்கொள்ளும். இந்த திட்டம் வெற்றிபெற்றால், விலை குறைந்த, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வீடுகள் ஏராளமான அளவில் டில்லியில் கட்டப்படும். ஆனால், அதற்கு முன்பாக மாதிரி வீடுகளை கட்டி காண்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில் இந்த மாதிரி வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டம் உறுதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ள, "கிரானைட் ரெசின்' நிறுவனம், கூர்கான் அருகில் ஜெர்மனியில் உள்ள தங்களது தொழிற்சாலை போன்றே, கிளை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.


(தினமலர், 06-08-2007)

0 மறுமொழிகள்: