கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கல்வியாளர்களிடம் பாடம் படிக்க வேண்டும் : ராமதாஸ் யோசனை

சென்னை : "தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வியாளர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று பா.ம.க., தலைவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் மற்றும் சமூக கல்விக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து, "பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமைப் பள்ளி முறை' குறித்து சென்னையில் நேற்று கருத்தரங்கு நடத்தியது. இதில், பா.ம.க., தலைவர் ராமதாஸ் பேசியதாவது:கல்வி, பாடத் திட்டங்கள் எல்லாமே தலை கீழாக உள்ளது. இதற்கு ஒரு யோசனை சொல்லலாம் என்றால் பயமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பது எப்படி, அந்த திட்டத்தை அமல்படுத்துவது எப்படி என்பது குறித்து, கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் வாரத்திற்கு நான்கு மணி நேரம் கல்வி அறிஞர்கள் குழுவிடம் பாடம் கற்க வேண்டும். மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு தமிழ் வழிக் கல்வி தான் சிறந்தது. நாங்கள் எல்லாம் தமிழ் வழியில் தான் படித்தோம். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழ் வழி கல்வி தான் உயர்ந்த நிலையில் இருந்தது. அவன் போனபிறகு ஆங்கிலம் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டது.வீட்டில் தேவைப்பட்டால் தமிழ் பேசுகிற நிலை இருக்கிறது. இப்படி பேசினால் ஆங்கில விரோதி, தமிழ் வெறியன் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கலாம். தற்போதுள்ள கல்வி முறையால் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழும் முழுமையாக தெரியவில்லை; ஆங்கிலமும் முழுமையாக தெரியவில்லை. இது தான் உண்மை. ஒருமொழிக் கொள்கை உன்னதக் கொள்கை. ஒரு மொழியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இருமொழிக் கொள்கை, தமிழை விரட்டி விட்டது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஆரம்பப் பள்ளிகளையும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். பொதுப்பள்ளி முறை மற்றும் அருகாமை பள்ளி முறையை கொண்டு வர வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொதுப்பள்ளி முறை தான் அமலில் இருக்கிறது. பிரதமர் வீட்டு குழந்தைகளும், சாதாரண ஏழை வீட்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அந்த நிலை இங்கு வர வேண்டும். கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி, தரமான கல்வி, அனைவருக்கும் கல்வி ஆகியவை தேவை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி மற்றும் கல்வியாளர் ராஜகோபால் ஆகியோரும், பொதுப்பள்ளி மற்றும் அருகாமை பள்ளி முறைகளின் அவசிய தேவை குறித்து விரிவாக பேசினர்.


தினமலர், 19-08-2007

0 மறுமொழிகள்: