வரலாற்று சம்பவங்களை விளக்க புது யுக்தி : தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்

சென்னை : வரலாற்றுச் சம்பவங்களால் நேரில் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அச்சம்பவங்களை விளக்கி வரலாற்றை எடுத்துரைக்கும் முறையை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) கையாண்டுள்ளது.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வரலாற்றை எடுத்துரைக்க புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது. வாய்மொழி கதைகள், வரலாற்று குறிப்புகள், டைரிகள், நேரடி கையெழுத்து ஆவணங்கள் மூலமாக வரலாற்றை கற்பிக்க தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய வரலாற்று கட்டுரைகள்பகுதி மூன்று' என்ற புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் "பிரிவினையை புரிந்து கொள்ளுவது' என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் நேரடி அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லாகூர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் நூலகராக பணியாற்றிய அப்துல் லத்தீப் என்பவரை 1993ம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி., ஆய்வாளர் சந்தித்து அவரது அனுபவத்தை பெற்றுள்ளார். அப்துல் லத்தீப், 1947ம் ஆண்டு ஜம்முவில் நடந்த கலவரத்தின் போது தனது தந்தைக்கு இந்து மூதாட்டி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். லாகூர் இளைஞர் விடுதியின் மேலாளரான இக்பால் அகமதுவின் அனுபவமும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் 1950ம் ஆண்டுகளில் கிளார்க்காக பணியாற்றி இக்பால் அகமது, தான் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதை அறிந்து, தனக்கு அறிமுகமில்லாத சீக்கியர் தன்னை கட்டித் தழுவி நட்புணர்வை வெளிப்படுத்தியதை விவரித்துள்ளார்.


தினமலர், 20-08-2007

0 மறுமொழிகள்: